புதுடெல்லி: இந்திய காவல்துறையால் தேடப்படும் நித்தியானந்தாவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறை அமைப்பான இண்டர்போல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும், அதன் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு இளம் பெண்களை கடத்தியதாகவும், அவர்களை தனது ஆசிரமத்தில் கட்டாயப்படுத்தி தங்க வைத்திருப்பதாகவும் நித்தியானந்தா மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் குஜராத் போலிசார் விசாரணை மேற்கொண்டபோது நித்தியானந்தா தலைமறைவானார். போலிசார் தம் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதாகவும் சாடினார்.
நித்தியானந்தா வெளிநாட்டிற்குத் தப்பிவிட்டதாகக் கருதப்படும் நிலையில், அவர் ஈக்வடார் நாட்டில் உள்ள தீவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் வெளியானது. எனினும் அவரது இருப்பிடத்தை உறுதி செய்ய முடியவில்லை.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குஜராத் போலிசார், அனைத்துலகப் போலிசின் உதவியை நாடினர். அதன் அடிப்படையில் அந்த அமைப்பு நித்தியானந்தாவுக்கு எதிராக எச்சரிக்கை நோட்டீசை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் இண்டர்போல் அமைப்பின் அதிகாரத்துக்குட்பட்ட 150 நாடுகளில் நித்தியானந்தா தங்கியிருக்கும் பட்சத்தில் அது தொடர்பான விவரங்கள் தெரியவரும். அதன் பிறகு அவரைக் கைது செய்வதற்கான சிவப்பு நோட்டீசை இண்டர்போல் வெளியிடும்.
தற்போது கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
நீல நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதால் நித்தியானந்தாவுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது நடமாட்டம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.