போபால்: வழக்கமாக திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளைதான் குதிரையில் வருவார். மாறாக மணப்பெண்கள் கையில் வாளேந்தி, குதிரையில் சென்று மணமகன்களை அழைத்து வந்து மணமுடித்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
அனந்த் மாவட்டத்தில் கடந்த புதன்கிாமை நடந்தேறிய புதுமையான திருமண ஊர்வலத்தில் சாக்ஷி, கிருஷ்டி என்ற மணப்பெண்கள், குதிரைகளில் தங்கள் மாப்பிள்ளைகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பாட்டிதர் சமுதாயத்தின் பாரம்பரியத்தின்படி நடைபெற்ற திருமணத்தில் மேலும் பல புதுமைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கைத்தறித் துணியில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் நிழல்தரும் மரக்கன்றுகளும் மருத்துவ மூலிகைச்செடிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவற்றில் முக்கியமாக வேம்பு, துளசி ஆகியவை இடம் பெற்றிருந்தன. ஆணுக்குப் பெண் சமம் என்று கூறப்படும் இன்றைய சமுதாயத்தில் ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டுமென இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டதாக ஒரு மணமகளின் தந்தை கூறினார்.