பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்திற்குக் கைகொடுக்கும் வண்ணம், பள்ளி மாணவர்கள் எந்திரங்களைக் கொண்டு 300 இளஞ்செடிகளை நட்டு, சிறிய காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
சென்னையில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த முயற்சி உலகத்தின் பார்வைக்கு வருவதற்காக எந்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்டது.
இளஞ்செடிகளை ஏந்திச் சென்ற எந்திரங்களை வழிகாட்ட மாணவர்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்தினர். செடிகள் நடப்பட்ட பின்னர் மாணவர்கள் அதில் மண்ணைச் சேர்த்தனர்.
பிறகு 15 மாணவர்கள் எந்திரங்களைக் கொண்டு இந்த செடிகளுக்கு நீர் தெளித்தனர்.
ஆஸ்திரேலியாவில் அண்மையில் நிகழ்ந்த காட்டுத் தீ சம்பவத்தைச் சுட்டி இது போன்ற நவீன எந்திரங்களை தீயைக் கட்டுப்படுத்த உதவலாம் என நான்காம் வகுப்பில் படிக்கும் மாணவர் சந்தினி கூறினார்.