சென்னை: இந்தியா முழுவதும் கொரோனா கிருமி தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா கிருமி குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்.வளாகத்தில் நடந்தது.
கூட்டத்துக்குச் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டம் முடிந்தபின்பு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
கொரோனா கிருமி தொடர்பாகத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் பொதுச் சுகாதாரத்துறையும், விமானநிலையத்தின் நிர்வாகமும் இணைந்து சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளையும் உடல் வெப்ப நிலையைப் பதிவுசெய்யும் சிறப்புக் கருவி மூலம் பரிசோதித்து வருகிறது.
அனைத்துலக விமான நிலையங்களான திருச்சி, கோவையில் நவீன கருவி மூலம் பயணிகளுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும், துறைமுகத்திலும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா கிருமி பாதிப்பு இல்லை. பொதுமக்கள் இது குறித்துப் பதற்றமோ, அச்சமோ அடைய தேவையில்லை.
நிபா, எபோலா வைரஸ் பாதிப்பு அண்டை மாநிலங்களில் இருந்தபோது, தமிழகத்தில் அந்தப் பாதிப்பு இல்லாத அளவுக்குத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா கிருமி குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
தமிழகத்தில் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கான வார்டு தயாராக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய மத்தியில் இருந்து 3 பேர் கொண்ட குழு வந்தது.
இது குறித்துத் தினமும் ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். நம்மிடம் அந்த கிருமி தாக்குதலைச் சமாளிக்கும் வகையிலான மருத்துவ வசதிகளுடன் தமிழ் நாட்டின் சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.