புதுடெல்லி: ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அச்சங்கத்தின் பொதுச்செயலரும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பி.ஆர்.பாண்டியன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசின் அனுமதி பெறுவதோ, கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்துவோ தேவை இல்லை’ என்று மத்திய அரசு கடந்த 16ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதுபோன்ற திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையும் என்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும். காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் முடங்கி, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை ஏற்படக் கூடும்.
“எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். அத்துடன் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என திரு பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கற்றியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கைக்கும் தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.