அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்து, பின்னர் முஸ்லிம் நபருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பின் பொது செயலர் ரவி தவானி கூறும்போது, “கடந்த 15ஆம் தேதி சிந்து மாகாணத்தின் மதியாரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி திருமணத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கட்டாயமாக முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், கராச்சியில் ஷாருக் மேமன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
“புகாரின் பேரில் போலிசார் கராச்சி சென்று, சிறுமியை மீட்டு வந்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தினர்.
“கடந்த இரண்டு வாரங்களில் இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்படுவது இது மூன்றாவது சம்பவம். மிர்புர் காஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிமாக மாற்றப்பட்டார். பின்னர் குலாம் முஸ்தபா என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார்,” என்று சொன்னார்.