புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கேரளாவில் கிருமித் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 436 பேர் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பலர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்குக் கிருமித் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், 436 பேர் 5 மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் வைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரக் குழுவின் மருத்துவ அதிகாரி சௌகத் அலி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் யாருக்கும் கொரோனா கிருமி பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாதிப்பில்லை என்றாலும், மருத்துவக் கண்காணிப்பு சில நாட்களுக்கு நீடிக்கும் என்றார்.
இதற்கிடையே கொச்சி, திருவனந்தபுரம் விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள அனைவருமே முறையாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமெனவும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனா கிருமி பாதிப்பு இல்லை என்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 17 பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது என்றும் அவர்களில் 14 பேருக்குக் கிருமி பாதிப்பு இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.