வரிவிதிப்பு முறையில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பலர் வரி வரம்புக்குள் வராமல் தப்பிப்பதைத் தடுக்கும் வகையில் 'என்ஆர்ஐ' எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகமான வெளிநாடுவாழ் இந்தியர்களை வருமானவரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான யோசனை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2020-21ஆம் நிதியாண் டுக்கான வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் டில் தனிநபர் வருமான வரிச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் இடம்பெற்றன.
என்ஆர்ஐ தொடர்பாக அரசு மேற்கொள்ள இருக்கும் மாற்றங்கள் குறித்து மத்திய வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே விளக்கினார்.
அவர் கூறுகையில், "வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். இப்போது வரை, ஓராண்டு காலத்தில் 182 நாட்களுக்கும் அதிகமாக வெளிநாட்டில் இருந்தால் அவர் வெளிநாடுவாழ் இந்தியர் (என்ஆர்ஐ) என்று கருதப்படுகிறார். இனிமேல் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 240 நாட்களாவது வெளிநாட்டில் இருந்தால்தான் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்று கருதப்படுவார்," என்றார்.
அதாவது, வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர் ஓராண்டு காலத்தில் 120 நாட்களுக்கும் மேலாக தாயகத்தில் (இந்தியாவில்) தங்கிவிட்டால் என்ஆர்ஐ தகுதியை இழப்பதுடன் அவரும் வருமானவரிப் பிரிவின்கீழ் வந்துவிடுவார்.
இதற்காக வருமான வரிச் சட்டப் பிரிவு 6ஐ திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சட்டம் திருத்தப்பட்டால் இந்திய குடிமகனான ஒரு தனிநபர் எந்த ஒரு நாட்டிலோ அல்லது பிரதேசத்திலோ வரி விதிப்பின்கீழ் வராமலிருந்தால், வெளிநாடுவாழ் இந்தியருக்கான சலுகைக்குள் வராமல் அவரும் இந்தியாவில் வசிப்பவராகக் கருதி வருமான வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்.
ஐக்கிய அரபு அமீரகம், பனாமா, பஹாமாஸ் உட்பட பல நாடுகளில் இருக்கும் இந்தியக் குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வருமானவரி செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் குறித்து பொருளியல் வல்லுநர்கள் கூறுகையில், "இது ஒரு மோசமான முன்னுதாரணம். பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் பணியாற்றக்கூடிய நாட்டில் மிகக் குறைந்த அளவில் வருமான வரி செலுத்துகிறார்கள். அல்லது, துபாய் போன்ற நாடுகளில் வருமானவரி என்பதே கிடையாது. அவர்கள் இப்போது இந்தியாவில் வருமான வரி செலுத்தக்கூடிய நிலைமை உருவாகிவிட்டது," என்றனர்.
இந்த மாற்றங்கள் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்கும் என்றும் இதனால் சிலர் இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுப்பதைப் பற்றிக்கூட யோசிக்கக்கூடும் என்றும் இந்த நடவடிக்கைகள் நிச்சயம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பொருளியல் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

