புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று மக்களவையில் பேசிய அவர், பல விவரங்களை வெளியிட்டார்.
“அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டம் தயாராக உள்ளது. இந்தப் பணிக்காக ‘ஸ்ரீராம் ஜன்ம பூமி தீர்த் ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வழிகாட்டியபடி இந்த சிறப்புமிக்க முடிவை அறிவிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று பிரதமர் மோடி சொன்னார்.
“ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த் க்ஷேத்ரா சுதந்திரமாக செயல்படும். அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப் படும்,” என்று மேலும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்ட ‘ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த் ஷேத்ரா’ அறக்கட்டளையில் ஒரு தலித் உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று கூறினார்.
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் இதுபோன்ற முன்னோடியில்லாத முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சொன்னார்.
புதிதாக அமைக்கப்பட்ட ‘ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த் ஷேத்ரா’ அறக்கட்டளைக்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருந்தது.
அதே சமயத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காக தனியாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அதே தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதோடு மத்திய அரசு 3 மாதத்திற்குள் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
அதன்படி வரும் 9ஆம் தேதியுடன் காலக்கெடு நிறைவடைய உள்ள நிலையில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.