புதுடெல்லி: பாஜகவை வீழ்த்தும் பொறுப்பை மாநிலக் கட்சிகளிடம் காங்கிரஸ் ஒப்படைத்துவிட்டதா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவி ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜியின் மகளான இவர், மாநில காங்கிரஸ் கமிட்டிகளை இழுத்து மூடிவிடலாமா? என்றும் தமது சமூக வலைத்தளப் பதிவில் கேட்டுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக சில தொகுதிகளில் வென்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மேலும் அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி மக்கள், பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவைத் தோற்கடித்துள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், “வரும் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில், மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்,” என்று தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
இது ஷர்மிஸ்தா முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
“பாஜகவைத் தோற்கடிக்கும் பொறுப்பை காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளுக்கு கொடுத்துவிட்டதா? அப்படியில்லை என்றால் நம்முடைய படுதோல்வி குறித்து கவலைப்படுவதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை ஏன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்?” என்று ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.