புதுடெல்லி: குற்றப்பின்னணியைக் கொண்ட தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பான தகவலை வெளியிடும்படி 2018ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் செயல்படுத்தவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றப்பின்னணியைக் கொண்ட தேர்தல் வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு பொதுத்தேர்தல்களில் உயர்ந்திருப்பதாக கூறிய நீதிபதிகள், குற்றப்பின்னணி வேட்பாளர்களைத் தேர்வுசெய்தது ஏன்? அவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
மேலும், வேட்பாளர்களின் நற்சான்றிதழ்கள், சாதனைகள் மற்றும் குற்றப்பின்னணிகள் தொடர்பான தகவல்களை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும், 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
“வேட்பாளர்கள் பற்றிய முழு விவரங்களையும் கட்சிகள் தங்களது இணையத்தளங்கள், வட்டார நாளேடுகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும். குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாகத் தேர்வுசெய்ததற்கான காரணத்தையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். கட்சிகள் தெரிவிக்காவிடில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறைப்படி தெரிவிக்க வேண்டும்,” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.