மும்பை: டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இது தொடர்பாகச் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சாடியுள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக தனது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்களையும் பிரசாரத்துக்குக் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அனைவரையும் தனி ஆளாக எதிர்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் மாபெரும் வெற்றி பெற்றார்.
பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் டெல்லி மக்கள் வாக்களித்து உள்ளனர். டெல்லியின் சட்டம், ஒழுங்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்குத் தேர்தலில் பயனளித்துவிட்டது.
டெல்லியில் மோசமான சட்டம், ஒழுங்கு குறித்துப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குற்றம் சாட்டியதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மேலும் டெல்லியில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிட்டி உள்ளது.
ஆம் ஆத்மியின் வெற்றியின் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாஜக குழம்பிப் போய் திணறுகிறது என்று அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டிருந்தது.