அகமதாபாத்: குஜராத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளில் யாருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அவர்களது ஆடைகளைக் களைந்து நடத்தப்பட்ட சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் தாங்கள் கடும் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளானதாக அம்மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரிக்கு வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அக்குறிப்பிட்ட கல்லூரியில் மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மாணவிகள் சக மாணவிகளுடன் தங்க அனுமதிக்கப் படுவதில்லை. மேலும் கல்லூரியில் உள்ள பிரார்த்தனைக் கூடத்திலும் உணவுக் கூடத்திலும் அவர்கள் நுழைய முடியாது.
மாறாக விடுதியின் கீழ்த்தளத்தில் உள்ள பகுதியில்தான் பொழுதைக் கழிக்கவேண்டும். வகுப்பறையிலும் கூட கடைசி வரிசையில்தான் அமர வேண்டும்.
இந்நிலையில் அண்மையில் கல்லூரி விடுதிக்கு அருகே உள்ள ஒரு தோட்டப்புறப் பகுதியில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நேப்கின் (napkin) கிடந்துள்ளது.
இதையடுத்து விடுதி மாணவிகளில் யார் அதை அங்கு வீசியது என்பதைக் கண்டறிய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
உடனடியாக 68 மாணவிகளை கழிவறை அருகே வரவழைத்து, ஆடைகளைக் களையுமாறு ஊழியர்கள் சிலர் நிர்ப்பந்தப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த வேதனையடைந்த மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரியின் அறங்காவலர் பிரவீன் பின்டோரியா, கல்லூரி விடுதிக்கான விதிமுறைகள் குறித்து தெரிவித்த பிறகே மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள் என்றார்.
“கல்லூரி நிர்வாக கமிட்டி கூட்டத்தைக் கூட்டியுள்ளேன். அதில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.