ஹைதராபாத்: பாலத்தின் மீது சென்ற கார் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த பெண்மணியும், மீட்புப் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை சுபாஷ் நகரைச் சேர்ந்த சீனிவாசனும், அவரது மனைவியும் வாராங்கல்லை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ஹைதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து பாலத்தின் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சீனிவாசன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் உயிருக்குப் போராடினார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலிசார், விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காவலர் ஒருவர் கயிறு கட்டி கீழே இறங்கி சீனிவாசனின் மனைவியை மீட்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கயிறு அறுந்து, அந்தக் காவலர் கீழே விழுந்தார். இதில் அவரும் படுகாயம் அடைந்தார். இதன் பின்னர் அவரும், சீனிவாசனின் மனைவியும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் படுகாயம் அடைந்த காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.