வாரணாசி: நாடு முழுவதும் எல்லா தரப்புகளில் இருந்தும் எவ்வளவு நெருக்குதல்கள் கிளம்பினாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெறப்போவதில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
அந்தச் சட்டத்துக்கு எதிராக மூன்று மாநிலங்கள் மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றன. இந்த நிலையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் தன்னுடைய வாரணாசி மக்களவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ரூ. 1,254 கோடி மதிப்பிலான 50 நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் எல்லாம் நாட்டின் நலனை மனதில் வைத்து எடுக்கப்பட்டவை என்றார்.
ஆகையால் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பினாலும் இந்த முடிவுகளில் இருந்து தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்று திரு மோடி உறுதிபட தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் 2019 டிசம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. பிறகு மேலவையிலும் அது நிறைவேறியது.
பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்படுகின்ற இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் ஆகியோர் இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கு புதிய திருத்தம் வகை செய்கிறது.
ஆனால் இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது என்றும் குறைகூறப்படுகிறது.
வாரணாசியில் கடந்த சில ஆண்டுகளாக ரூ.25,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் முடிந்துள்ளதாகவும் இவற்றில் சில வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்த பிரதமர், வாரணாசியில் 430 படுக்கைகள் கொண்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையையும் தொடங்கிவைத்தார்.
இரவில் இயங்கும் முதல் தனியார் ரயில் சேவையான ‘மகாகாள் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையைக் காணொளிக் காட்சி மூலம் வாரணாசியில் இருந்து பிரதமர் தொடங்கி வைத்தார்.
வாரணாசி, மத்தியப் பிர தேசத்தின் உஜ்ஜெயின் மற்றும் ஓம்கரேஷ்வர் ஆகிய புனித தலங்களை இச்சேவை இணைக் கிறது.