இணையம் வழி நகப்பூச்சு வாங்க முயன்ற இளம்பெண் ரூ.92,000ஐ இழந்துள்ளார்.
புனே நகரைச் சேர்ந்த அந்த இளம்பெண் தனது கைபேசி மூலம் குறிப்பிட்ட இணையத்தளம் வழி நகப்பூச்சு வாங்க பரிவர்த்தனை செய்துள்ளார். இதற்காக ரூ.388ஐ தனது வங்கிக் கணக்கு மூலம் அவர் செலுத்தியுள்ளார்.
எனினும், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி பணம் செலுத்தியும் நகப்பூச்சு வந்து சேராததால், அந்த இணையத்தளத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டுள்ளார் அந்த இளம்பெண்.
அப்போது சேவை மைய ஊழியர், நகப்பூச்சுக்கான தொகை தங்களுக்கு வரவில்லை என்றும், பணம் வந்துவிட்டால் அதை இளம்பெண்ணின் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த ஊழியரிடம் தமது கைபேசி எண் உள்ளிட்ட சில விவரங்களை அந்த இளம்பெண் கொடுத்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் அந்த ஊழியரிடம் பேசி முடித்த சில மணி நேரங்களில் இளம்பெண்ணின் இரண்டு வெவ்வேறு தனியார் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90,946-அடுத்தடுத்து 5 தவணையாக எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல்கள் வந்துள்ளன.
அவருடைய பொதுவங்கிக் கணக்கு ஒன்றிலிருந்தும் ரூ.1500 எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலிசில் புகார் அளித்தார்.
தமது வங்கிக்கணக்கு தொடர்பான எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என இளம்பெண் கூறும் நிலையில், சந்தேக நபர்கள் இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#இணையமோசடி #தமிழ்முரசு