அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், மூன்று மணி நேரம் மட்டுமே இருக்கப்போவதாகக் கூறப்படும் நிலையில், மாநில அரசு செய்து வரும் ஏற்பாடுகளை சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் இந்தியர்களின் அடிமை மனநிலையைக் காட்டுகிறது என்று அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தர உள்ளார் அதிபர் டிரம்ப். அவர் செல்லும் வழியில் குடிசைப் பகுதிகள் அமைந்துள்ளன.
எனவே அமெரிக்க அதிபர் பார்வையில் அக்குடிசைகள் படாத வகையில், அந்தப் பகுதியில் ஏழு அடி உயரத்துக்குப் புதிய சுவர் எழுப்பப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மொடேரா பகுதி குடிசைவாசிகள் அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குடிசைவாசிகள் தவிப்பில் உள்ளனர்.
45 குடும்பங்களுக்கு இந்த நோட்டீஸ் வந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் நகராட்சி அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.
“அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகை பேரரசரின் வருகை போல உள்ளது. சுதந்திரத்திற்கு முன் இங்கிலாந்து அரசர் அல்லது ராணி இந்தியா போன்ற தங்களின் அடிமை நாடுகளுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
“தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் அதை நினைவூட்டுகின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். அந்த முழக்கம் நீண்ட நாட்களுக்கு ஏளனம் செய்யப்பட்டது. தற்போது மோடியின் திட்டம் ‘வறுமையை மறைப்பது’ போல தெரிகிறது,” என்று சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு நீளமான சுவரை எழுப்ப நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்பட்டதா? என்றும், நாடு முழுவதும் இவ்வாறு சுவர் எழுப்ப அமெரிக்கா கடனுதவி எதுவும் வழங்கப்போகிறதா? என்றும் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
“அதிபர் டிரம்ப்பின் வருகையால் அன்னிய செலாவணி சந்தையில் ரூபாயின் வீழ்ச்சியை நிறுத்தவோ அல்லது சுவருக்குப் பின்னால் இருப்பவர்கள் (குடிசைப்பகுதி மக்கள்) மேம்படவோ போவதில்லை,” என்றும் சிவசேனா மேலும் விமர்சித்துள்ளது.