வாரணாசி: தனது மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ரிக்ஷா ஓட்டுநரை நேரில் வரவழைத்து சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
மங்கள் கேவத் என்ற அவர், தூய்மை இந்தியா இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.
தனது கிராமத்தில் கங்கை ஆற்றங்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தனது மகளின் திருமணத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் அலுவலகத்தில் திருமணப் பத்திரிகையை அளித்தார் மங்கள் கேவத். எனினும் பிரதமர் மோடி திருமணத்துக்கு வரவில்லை. மாறாக, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
பிரதமரின் வாழ்த்துச் செய்தி தங்கள் குடும்பத்துக்கு பெரும் உற்சாகம் அளித்ததாகக் கூறுகிறார் மங்கள் கேவத்.
இந்நிலையில் ஒருநாள் பயணமாக வாரணாசி சென்ற பிரதமர் மோடி, அங்கு மங்கள் கேவத்தை சந்தித்து நலம் விசாரித்தார்.
தூய்மை இந்தியா இயக்கத்துக்கான அவரது பங்களிப்பைப் பாராட்டினார்.