அகமதாபாத்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது மனைவி மெலன்னியா டிரம்ப்புடன் நாளை மறுதினம் (பிப்ரவரி 24) இந்தியா வருகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறை.
டிரம்ப்பின் வருகைக்காக அகம தாபாத் நகரம் வெகு வேகமாகத் தயாராகி வருகிறது. 100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏறக்குறைய 10,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே ஆயுத, பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நடந்த ஹௌடி மோடி நிகழ்ச்சியைப்போலவே அகமதாபாத்தில் ‘கெம் சோ டிரம்ப்’ என்ற பெயரில் டிரம்ப் உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதற்காக அங்குள்ள மோட்டோரா திடலில் 1.1 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. புகழ்பெற்ற சபர்மதி ஆசிரமத்திற்கும் டிரம்ப் செல்வார். மகாத்மா காந்தியின் ஆசிரமத்தை பார்வையிட உள்ள முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்.