உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகம்.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச சுரங்கத்துறை இயக்குநரக அதிகாரி கே.கே.ராய், “சுமார் 20 ஆண்டுகளாக அந்த இடங்களில் தங்கம் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. அதனையடுத்து, மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா, ஹர்தி ஆகிய இடங்களில் பூமிக்கடியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவைவிட 5 மடங்கு அதிகம்.
இந்த சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இணைய வழி ஏல நடவடிக்கைகள் கவனிக்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி யுரேனியம் போன்ற அரிய தாதுக்களும் அங்கு உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
உலக தங்கக் கூட்டமைப்பின்படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது.
இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6%. அதிகபட்சமாக அமெரிக்காவிடம் 8,133.5 டன் தங்கம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் ஜெர்மனியிடம் 3,366 டன், இத்தாலியிடம் 2,451.8 டன், பிரான்ஸிடம் 2,436 டன், ரஷியாவிடம் 2,241.9 டன், சீனாவிடம் 1,948.3 டன், சுவிட்ஸர்லாந்திடம் 1,040 டன் மற்றும் ஜப்பானிடம் 765.2 தங்கம் கையிருப்பு உள்ளது.
#இந்தியா #தங்கச்சுரங்கம் #தமிழ்முரசு #உத்தரப்பிரதேசம்