பெங்களூரு: மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிக காலத்தில் இருந்து இந்தியாவுக்கும், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு இருந்ததாக இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மவுரியர்களின் ஆட்சியில் இந்த உறவு மேம்பட்டதுடன், பௌத்தம் பரவியதன் வாயிலாக கடல் தாண்டிய வியாபார தடைகள் நீங்கியதாகச் சுட்டிக்காட்டினார்.
20ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் 1,500க்கும் மேற்பட்ட தொழில்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ரணில் தெரிவித்தார்.
காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்து முதலில் விடுபட்ட இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுடன் இத்தகைய வர்த்தக உறவை மேம்படுத்த தவறிவிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதனை மேம்படுத்த ஒவ்வொரு நாடும் அவ்வப்போது முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அண்டை நாடுகளுக்கு இடையே நீடிக்கும் சிக்கலால் அதனை சரியான திசையில் கொண்டு செல்ல முடியாமல் போகிறது என்றார்.
தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஏற்றுமதிக்கான அடிப் படை கட்டமைப்பு வசதியும், அனைத்து வகையான தொழில் புரிவதற்கான உகந்த சூழலும் நிலவுவதாகவும், இந்தியா மைய வர்த்தக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் ரணில் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மைக்காலமாக சீனா மைய பொருளாதார கட்டமைப்பை உருவாக்கிவரும் நிலையில், தெற்காசிய அரசியலில் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
“எனவே தெற்காசிய அரசியல் மட்டுமல்லாமல் பொருளாதாரம், கட்டமைப்பு மேம்பாடு, ஒருங்கிணைந்த திட்டங்கள் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தி தொழில் ரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டால் இந்த பிராந்தியம் உலகின் 4ஆம் பெரிய பொருளாதார மண்டலமாக மாறும்,” என்றார் ரணில்.