இந்தியாவில் மாதாமாதம் புதிதாக மூவர்; 138 மகா பணக்காரர்கள்

இந்தியாவில் மாதாமாதம் புதிதாக மூவர்; 138 மகா பணக்காரர்கள்

2 mins read
5a431dbf-62be-4e15-82b6-78a6d943f1a1
ஆசியாவிலேயே ஆகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி. கோப்புப்படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் மாதத்திற்கு மூன்று பேர் என்ற விகிதத்தில் அதிகரித்து இருக்கிறது.

அந்த நாட்டில் இப்போது 138 மகா கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், அதிக கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது.

'ஹூரன் உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியல் 2020' இவ்வாறு தெரிவிக்கிறது. அந்தப் பட்டியலில் சீனா முதலிடம் வகிக்கிறது.

சீனாவில் 799 மகா கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். அடுத்ததாக அமெரிக்காவில் 626 பெரும் கோடீஸ்வரர்கள் இருப்பதாக அந்தப் பட்டியல் கூறுகிறது.

உலகம் முழுவதும் இருக்கும் மகா கோடீஸ்வரர்களில் ஏறக்குறைய பாதி பேர் சீனாவிலும் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள்.

இந்தியப் பொருளியல் எதிர்பார்த்ததைப்போல் இல்லை என்றாலும்கூட அங்கு மகா கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் மோட்டார் வாகனம் மற்றும் நிலச் சொத்து தொழில்துறைகளில் புதிய கோடீஸ்வரர்களின் அதிகரிப்பு குறிப்பிடும்படி இல்லை. ஆனால் இந்தத் தொழில்துறைகள் வரும் ஆண்டுகளில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பொருளியலை US$5 டிரிலியன் மதிப்புள்ளதாக ஆக்க வேண்டும் என்று பாஜக அரசாங்கம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

அந்த இலக்கு நிறைவேறும் வகையில் பொருளியல் வளர்ச்சி கண்டால் இந்தியாவின் மகா பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் இரண்டு மடங்காகும் என்று ஹூரன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை ஆய்வாளருமான அனாஸ் ரஹ்மான் தெரிவித்து உள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானிதான் தொடர்ந்து ஆசியாவிலேயே ஆகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார்.

US$67 பில்லியன் சொத்துடன் அவர் மட்டுமே உலகின் மாபெரும் 10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் ஆசிய நாட்டவர்.

அம்பானி சொத்து அதிகரித்ததற்கு முக்கிய காரணம் தொலைத்தொடர்புத் துறையில் அவருடைய நிறுவனத்தின் சாதனைதான்.