புதுடெல்லி: அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று அமைதி உடன்பாடு கையெழுத்தாகிறது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
அந்த வரலாற்று முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
தலிபான் பிரச்சினையில் ஆப்கானிஸ்தான் அரசு எடுக்கும் நிலைப்பாட்டை ஒட்டியே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதா வேண்டாமா என்ற முடிவை இந்தியா எடுக்கும் என்று முன்னதாக இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.
தலிபான்கள் தொடர்பான விவகாரத்தில் இந்தியா முதல் முறையாக நேரடி தொடர்பில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆப்கானிஸ் தான் அரசு சார்பில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் தோஹாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு நடத்தப்படும் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ள சுமார் 5,000 தலிபான்களை விடுவிக்கும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா பேச்சு நடத்தியது.