நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரியைத் தொடங்கி வைக்க நீடாமங்கலம் வழியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நீடாமங்கலம் அடுத்த கொண்டையாறு கிராமத்தில் வயலில் பெண்கள் நாற்று நட்டு கொண்டிருப்பதை பார்த்ததும் காரை நிறுத்த சொன்னார் அவர்.
வயலுக்கு நடந்து சென்ற அவரைப் பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்துடன் நின்றுவிடாமல், வேட்டியை மடித்துக் கட்டி வயலில் இறங்கி நாற்று நடத் தொடங்கிவிட்டார் முதல்வர். இதனைப் பார்த்து நெகிழ்ந்துபோன மக்கள், எங்களுக்கு ஒரு விவசாயி முதலமைச்சராக கிடைத்திருப்பது பெருமை என்றனர்.
அப்போது, "நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். இப்போதும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். மேலும், தமிழகத்தில் பணி நிமித்தம் செல்லும் இடங்களில் விவசாயிகளிடம் பேசி குறைகளை கேட்டறிகிறேன். எமது அரசு விவசாயம் சார்ந்த நல்ல திட்டங்களை செயல்படுத்தி கொண்டே இருக்கும். விவசாயம் தான் நாட்டின் உயிர்நாடி," என்றார் தமிழக முதல்வர்.
#தமிழக முதல்வர் #எடப்பாடி #விவசாயம் #தமிழ்முரசு

