கொரோனா கிருமித்தொற்று காரணமாக கடந்த ஒரு வார காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் பயணக் கட்டணங்கள் கிட்டத்தட்ட 40% குறைந்துவிட்டன.
பெங்களூரில் இருந்து மற்ற பெருநகரங்களுக்கான விமானப் பயணக் கட்டணம், இரண்டாம் வகுப்பு ‘ஏசி’ ரயில் பயணக் கட்டணங்களைக் காட்டிலும் குறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பெங்களூரு மட்டுமின்றி, நாடு முழுவதும் இதே போக்கே காணப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு ‘இக்கானமி’ விமானப் பயணக் கட்டணம் நேற்று 1,091 ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில், சதாப்தி விரைவு ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கான கட்டணம் ரூ.1,455.
வழக்கமாக, சென்னை-பெங்களூரு நகரங்களுக்கான விமானப் பயணக் கட்டணம் 2,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய்க்குள் இருக்கும்.
பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தின் புறப்பாட்டு முனையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக ‘டெக்கன் ஹெரால்டு’ செய்தி கூறுகிறது.
உண்மை நிலவரம் இன்னும் இரு நாட்களில் தெரியவரும் என விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.
பயணிகள் எண்ணிக்கை சரிவைத் தடுப்பதற்காக, விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பயணச்சீட்டு ரத்துக் கட்டணத்தை முற்றிலுமாக நீக்கியுள்ளன; பயண முகவர்களுக்குச் சலுகைகளை அறிவித்துள்ளன.
ஆனால், இவையெல்லாம் சரிவை நிறுத்தாது என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பயண முகவர் ஒருவர். “இப்போதே 30% முதல் 50% வரை சரிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களுக்கும் கொரோனா கிருமி பரவி வருவதால் நிலைமை இன்னும் மோசமாகவே வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.
“கட்டணம் மலிவாக இருந்தாலும் விமானங்களில் செல்லத்தான் ஆளில்லை,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த இன்னொரு பயண முகவர்.
#விமானச் சேவை #கட்டணம் #இந்தியா