தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுருப்பதாகக் கூறப்படுகிறது.
ஓமன் நாட்டில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி விமானம் மூலம் தமிழகம் திரும்பிய காஞ்சிபுரத்துக்காரருக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றார்.
உடல்நலம் மேம்படாத நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா அறிகுறிகள் இருந்ததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
அங்கு அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிறுவனத்திற்கும், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது மனைவி, உறவினர்கள் உள்ளிட்ட 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கிருமித்தொற்று பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் நிபுணத்துவத்தால் விரைவாக அவர் குணமடைந்ததாக தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது தமிழகத்தில் கொரோனா இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.