கேரளாவில் கொரோனா கிருமித்தொற்று அதிகம் பரவி வருவதால் அங்கு ஒரு மாத காலத்திற்கு திரையரங்குகளை மூடுவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இன்று (மார்ச் 11) முதல் மார்ச் 31ம் தேதி வரை கேரளாவில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மலையாள திரைப்படங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்றாலும் தமிழ் படங்களுக்கும் கணிசமான பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
சித்திரைப் புத்தாண்டை ஒட்டி அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாக இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா கிருமித்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து, அடுத்த மாதமும் திரையரங்குகள் மூடப்பட்டால் கேரளாவில் அந்தப் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்படும்.
இந்த அறிவிப்பு நேற்று வெளியானதும் கேரள விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
அதில் இன்று முதல் திரையரங்குகளில் படம் திரையிடப் போவதில்லை எனவும், வரும் 13ம் தேதி முதல் மார்ச் மாத இறுதி வரை வெளியாகவிருந்த புதுப் படங்களின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.
மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மரக்கார்: அரபிக்கடலிண்ட சிம்ஹம்’ படம் வரும் மார்ச் 26ம் தேதி வெளியாகவிருந்தது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அந்த படத்தின் வெளியீடும் தள்ளிப் போகிறது.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 62.
இத்தாலியிலிருந்து பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி கேரளாவுக்குத் திரும்பிய 96 வயது ஆடவர், அவரது 85 வயது மனைவி ஆகியோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மனைவியின் உடல்நலம் கவலைக்குரியதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்கெனவே இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், கணவரின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தாலியிலிருந்து கேரளாவுக்குத் திரும்பிய 45 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கேரளாவில் கிருமித்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#கொவிட்-19 #கொரோனா #இந்தியா #கேரளா #திரையரங்கு