புதுடெல்லி: கையை இழந்த ஷிரேயா சித்தானாகவ்டருக்கு பெரிய, கறுப்பு நிற, ரோமம் உள்ள ஓர் ஆணின் கைகள் தானமாகக் கிடைத்தபோது உடனே ஒப்புக் கொண்டார்.
ஒரு காலத்தில் ஓர் ஆணுக்குச் சொந்தமாக இருந்த கைகள் தற்போது அவரது உடலுக்கு ஏற்ப நிறம் மாறியிருக்கிறது. இது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களையும் வியக்க வைத்துள்ளது.
சுமார் 13 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு கைகள் பொருத்தப்பட்டன.
புனேயில் உள்ள வீட்டிலிருந்து பேசிய செல்வி சித்தானாகவ்டரின் தாயார் சுமா, தனது மகள் கைகளுக்கு வளையல் போட்டு அழகு பார்க்கிறார் என்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் தமது 18 வயதில் பேருந்து விபத்தில் சிக்கிய சித்தானாகவ்டரின் கைகள் நசுங்கிவிட்டன.
முதலுதவி தாமதமானதால் அவருடைய கைகள் முழங்கைக்கு கீழே துண்டிக்கப்பட்டன.
உலகம் முழுவதும் 200 மாற்று சிகிச்சைகள் மூலம் கைகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்பது இந்தியாவில் நடந்தவை.

