கொரோனா கிருமித்தொற்றால் இந்தியாவில் 83 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு இரண்டாவது நபர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த 69 வயது பெண் நேற்று (மார்ச் 13) கொரோனாவுக்கு பலியானார். கிருமித்தொற்றால் இந்தியாவில் பலியான இரண்டாவது நபர் அவர்.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் மகன் கடந்த மாதம் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினார். அதன்பின் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
பின்னர், அவரது தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 7ஆம் தேதி டெல்லி ராம் மனோகர் லோதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், 9ஆம் தேதி அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
கொரோனா கிருமித்தொற்று கடுமையாக பாதித்துள்ள இத்தாலி நாட்டில் இருந்து திரும்பிய மகனிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு கொரோனா கிருமித்தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
69 வயதான அவர், ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கடந்த 11ஆம் தேதி கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தார். அவர் அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்று திரும்பியவர். இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்த முதல் நபர் இவர்.
#கொவிட்-19 #கொரோனா #இந்தியா