லக்னோ: முதல்வர், துணை முதல்வரை கலவரக் குற்றவாளிகளாக சித்திரித்து காங்கிரஸ் கட்சியினர் வைத்த பதாகைகளால் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.
அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது உத்தரப்பிரதேசத்தில் கலவரம் வெடித்தது. அப்போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாக அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய பதாகைகள் மாநிலம் முழுவதும் அரசு ஏற்பாட்டில் வைக்கப்பட்டன.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், இந்த எதிர்ப்பைப் புறந்தள்ளிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பொதுச்சொத்துகளுக்கான இழப்பீடு கலவரக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கொலை, கலவரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 வழக்குகள் இருப்பதாகவும், துணை முதல்வர் மீது 11 வழக்குகள் உள்ளன என்றும் காங்கிரஸ் வைத்துள்ள பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த இருவரால் சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகளுக்கான இழப்பீடு ஏன் இன்னும் வசூலிக்கப்படவில்லை? என்றும் அந்தப் பதாகைகளில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

