புதுடெல்லி: பிரிட்டன், துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் தாய்நாடு திரும்ப தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும். அத்துடன், இந்தியர்கள் உட்பட மலேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து செல்லும் எவருக்கும் இந்தியாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாடுகளில் இருந்தும் இம்மாதம் 31ஆம் தேதி வரை இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்படாது என்று விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நிரந்தர விசா தகுதியான 'ஓசிஐ' அட்டை வைத்திருப்போர் உட்பட வெளிநாட்டவர்கள் எவரும் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை இந்தியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்தத் தடை அறிவிப்புகள், பல்வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் சேவைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. இம்மாத இறுதி வரை இந்தியாவிற்கான விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு அந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பல்வேறு வெளிநாட்டு, உள்நாட்டு விமான நிறுவனங்களும் 500க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்துவிட்டன.
இதனிடையே, கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், குவைத், ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோரும் கட்டாயமாக 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக, சீனா, கொரியா, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய ஏழு நாடுகளில் இருந்து வருவோர் இந்த நடைமுறைக்கு உட்படவேண்டும் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

