புதுடெல்லி: நாடு முழுவதும் கிட்டத்தட்ட 54,000 பேர் சமூகக் கண்காணிப்பின்கீழ் இருப்பதாகவும் சுகாதார ஊழியர்கள் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அத்துடன், கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அக்கறையுடன் பணியாற்றி வரும் மருத்துவர்களையும் துணை மருத்துவ ஊழியர்களையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். தங்களது வட்டாரங்களில் உள்ள 'தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு' செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்திய அவர், அங்குள்ள வசதிகளை மேம்படுத்த உதவுமாறும் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். கிருமி பாதிப்புள்ளோருக்குச் சிகிச்சை அளிப்பதில் இந்திய மருத்துவ ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் அனைத்துலக ஆய்வாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

