புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு நேற்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர், நாட்டில் நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது என்று கூறினார்.
அதேவேளையில், "தாமதமாகக் கிடைத்தாலும் எனது நாடு நீதியைப் பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த நாட்டிற்கும் நீதி கிடைத்துள்ளது," என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி உணர்ச்சி பொங்க கூறினார்.
புதுடெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாகிக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவம் தொடர்பில் மொத்தம் ஆறு பேர் கைதானார்கள். அவர்களில் ராம்சிங் என்பவர் திகார் சிறையில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி உயிரை மாய்த்துக்கொண்டார்.
ஒருவருக்கு வயது குறைவு என்பதால் அவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவடைந்து அவர் விடுதலையாகிவிட்டார்.
இதர குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், 32, பவன் குமார் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 27, அக்ஷய் குமார், 33, ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் பின்னர் உறுதி செய்தன.
மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக குற்றவாளிகள் நால்வரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்தனர்.
அதனால் அவர்களைத் தூக்கில் போடுவது மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, நேற்று அதிகாலை 5.30 மணிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பிறகு டுவிட்டரில் இது பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, பெண்களின் கவுரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் இந்தத் தண்டனை மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
"இந்தத் தீர்ப்பு நீதியை நிலை நாட்டி இருக்கிறது. நமது சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அத்தகைய ஒரு நாட்டில் சமத்துவம், சரிசம வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்," என்றும் திரு மோடி கூறினார்.
அதேபோல் நிர்பயாவின் தாயாரும் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை மிகவும் வரவேற்றார்.
குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து திகார் சிறை வெளியே இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாடினர்.
தேசியக் கொடியுடன் வந்திருந்த சமூக ஆர்வலர்கள், இந்தியாவுக்கு வெற்றி எனக் குரல் எழுப்பி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே, போலிஸ் மற்றும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாகவே நிர்பயா வழக்கில் நீதி கிடைக்க 7 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து கூறினார். இவ்வேளையில் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

