மும்பை: பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் (படம்) சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு இம்மாதம் 15ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார். கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் அவரை 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அதை மதிக்காமல் லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த விழாவில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் உள்ளிட்டோருடன் கலந்துகொண்டார்.
தற்போது கனிகாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து வசுந்தராராஜே, அவரது மகன் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விழாவில் கலந்துகொண்ட துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்துக்குச் சென்று வந்ததாலும் அதிபர் ராம்நாத் கோவிந்த் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்துகொண்டதாலும் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவ வாய்ப்புகள் ஏற்படும் வகையில் கவனக்குறைவாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவின்கீழ் போலிசார் பாடகி கனிகா கபூர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

