புதுடெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 283ஆக உயா்ந்துள்ளது.
ஓர் இத்தாலியர், மூன்று இந்தியர் என இதுவரை நான்கு பேர் கிருமித்தொற்றால் மரணமடைந்துவிட்டனர். பாதிக்கப்பட்டோரில் 23 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும் கேரளத்தில் 40 பேரும் தமிழகத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று பிற்பகல் நிலவரம்.
கொரோனா தாக்குதலில் இந்தியா தற்போது 2வது நிலையில் உள்ளது. 3வது நிலையான சமூக பரவல் நிலைக்கு செல்லாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியும் தொடர்ந்து கண்காணித்தும் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.
கொரோனா கிருமியை எதிர்கொள்ளவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை விரைந்து செய்யுமாறு அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் செய்யவும் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தேவையான அளவுக்கு வென்டிலேட்டர்கள் வைக்கவும் பிராணவாயு மற்றும் முகக்கவசங்களை தயாராக வைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி தாக்குதலை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக எல்லா அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் கொரோனாவில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே 60 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வென்டிலேட்டர் எண்ணிக்கையை 2½ மடங்கு அதிகமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

