புதுடெல்லி: சுய ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு டெல்லி போலிசார் ரோஜாப்பூக்களைக் கொடுத்து அறிவுரை கூறினர்.
கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையினர், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் அரசின் இம்முயற்சிக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒருநாள் நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்கப்பட்டது. கொரோனா கிருமி பாதிப்பிலிருந்து நாட்டைக் காப்பதற்கான சோதனை முயற்சி இது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
'மக்கள் ஊடரங்கு' காரணமாக நாடு முழுவதும் ரயில், மற்றும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால், பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அதேவேளையில் சில இடங்களில் பொதுமக்கள் இந்த சுய ஊரடங்கையும் மீறி வெளியே நடமாடினர்.
இத்தகைய நபர்களிடம் கடுமை காட்டாமல் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று போலிசார் அறிவுறுத்தினர். டெல்லியில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடியவர்களிடம் போலிசார் ரோஜாப்பூ கொடுத்து வீட்டிற்குச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டனர்.
போலிசாரின் இந்தச் செயல்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் காணொளிப் பதிவுகளும் இணையத்தில் வைரலாகின.

