மும்பை: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19 நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா வந்த வெளிநாட்டவர்கள் மூலம் பரவுகிறதா என தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
மும்பை கல்யாணி பகுதியில் அமெரிக்காவில் இருந்து வந்தவர், தமக்கு கிருமித் தொற்று இருப்பது தெரியாமலேயே சுமார் ஆயிரம் பேருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டதுடன் திருமணம் ஒன்றிலும் பங்கேற்றுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கிருமி பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா கிருமி தொற்றுக்கு பலியான முதல் வெளிநாட்டவர் இவர்.
டெல்லியில் 30 பேருக்கும் கேரளாவில் 67 பேருக்கும் ராஜஸ்தானில் 28 பேருக்கும் கிருமி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 9 பேர், பீகாரில் 2 பேர், அரியானாவில் 7 பேர், இமாசலப்பிரதேசத்தில் 2 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

