புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 23 மாநிலங்களைச் சேர்ந்த 80 மாவட்டங்களைத் தனிமைப்படுத்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா கிருமித் தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். புதுடெல்லியில் பிரதமரின் முதன்மைச் செயலர், மத்திய அமைச்சரவை செயலர் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கான உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை 31ஆம் தேதி வரை முற்றிலுமாக நிறுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை ஏற்று தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், மலப்புரம், பத்தனம்திட்டா, திருச்சூர் ஆகிய 10 மாவட்டங்களும் ஆந்திராவில் பிரகாசம், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களும் தெலுங்கானாவில் ஹைதராபாத், பத்ராத்ரி கொத்தகூடம், மெட்சாய், ரெங்காரெட்டி, சங்காரெட்டி ஆகிய 5 மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. டெல்லியும் தனிமைப்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பொது மக்கள் அடுத்த இரு வாரங்களுக்கு அரசாங்கம் வெளியிடும் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும், அதன் மூலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே அனைத்து மாநில முதல்வர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

