புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
கொரோனா கிருமி தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கூறியும் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர். அவர்கள் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படவில்லை. தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
"தடையை மீறி தனியார் நிறுவனங்கள் திறந்தால் 'சீல்' வைக்கப்படும். பால் மற்றும் மருந்துகடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்படும். மீறினால் கைது செய்யப்படுவார்கள்.
"புதுச்சேரி மக்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் தடுப்பதற்கு, தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும்," என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் ஆகிய எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதன் வழியாக வரும் எந்த வெளியூர் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. அவை திருப்பி அனுப்பப்படுகின்றன.
இருந்தபோதிலும் நகர பகுதியில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் ஆங்காங்கே சுற்றுகின்றனர். அவர்களை போலிசார் விரட்டி விரட்டி பிடித்து விசாரிக்கின்றனர்.

