புதுடெல்லி: கொரோனா கிருமியின் தாக்கத்தால் உலகெங்கும் உள்ள மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ள நிலையில், இந்தியாவிலும் இந்தக் கிருமியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாட்டில் இதுவரை கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 649 பேராக அதிகரித்துள்ளதாகவும் இவர்களில் 42 பேர் குணமடைந்துவிட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா கிருமி யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 பேராக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 10ல் இருந்து 13ஆக அதிகரித்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கொரோனா கிருமியின் பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீநகர் இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயது ஆடவர் நேற்று உயிரிழந்தார். ஏற்கெனவே அவர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கிருமித் தொற்றால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேரும் கேரளாவில் 118 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்தவர்கள் என்றும் இவர்களையும் சேர்த்து கேரளாவில் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளதாகவும் பினராயி விஜயன் கூறினார்.
இதற்கிடையே மும்பையில் கடந்த 24ஆம் தேதி உயிரிழந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.