புதுடெல்லி: வெளி மாநிலங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்புவதால் புதுடெல்லி, மும்பை போன்ற நகர்ப் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பெரும் கூட்டம் காணப்படுகிறது.
இதனால் கொரோனா கிருமித்தொற்று சமூகத் தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அச்சம் கிளம்பி இருக்கிறது.
இந்தச் சூழலில், வெளி மாநிலத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்புவதைத் தடுக்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச எல்லைகளை மூடிவிட வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அவசர உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.
இதனையடுத்து புதுடெல்லியில் இருந்து தொழிலாளர்கள் பல பகுதிகளுக்கும் வெளியேறுவதைத் தடுக்க எல்லைகள் இழுத்து மூடப்பட்டு இருக்கின்றன.
வேலை பார்க்கும் பகுதிகளிலேயே தங்கி இருக்கும்படி ஊழியர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டாலும் பலரும் கால்நடைமூலமாகவே தங்கள் ஊர்களுக்குச் சென்றுகொண்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு, உறைவிடம் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எல்லைகள் அடைக்கப்பட்டுவிட்டதால் பல பகுதிகளிலும் வெளிமாநில ஊழியர்கள் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டு உள்ள இத்தகைய ஊழியர்களுக்கு உணவு, இருப்பிடம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் கட்டளைப் பிறப்பித்து இருக்கிறது.
நகரங்கள், நெடுஞ்சாலைகள், எல்லைப் பகுதிகளில் மக்கள் நடமாட்டமே இருக்கக் கூடாது என்றும் இதை போலிஸ் துறையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த உத்தரவு குறிப்பிடுகிறது.

