புதுடெல்லி: குஜராத், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மாநிலங்களில் நேற்று கொரோனாவுக்குச் சிலர் பலியானார்கள். இதையடுத்து இந்தியாவில் மரணம் 34 ஆக உயர்ந்தது. அதேவேளையில், கிருமியால் பாதித்துள்ளவர்கள் எண்ணிக்கை 1,150 ஆக கூடியது.
நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமை வரை 34,931 ரத்த மாதிரிகள் கொரோனா கிருமித் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் தெரிவித்தது.
கொரோனா பாதிப்பில் மகா ராஷ்டிரா, கேரளா, கா்நாடகா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் சாங்லி மாவட்டம் இஸ்லாம்பூர் என்ற நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சவுதி அரேபியா சென்று திரும்பினர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பிறகு அக்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆண் குழந்தை உட்பட மொத்தம் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறின. பலருக்கும் தொற்று இருப்பது உறுதியானதால் அந்த மருத்து வமனையே கொரோனா சிகிச்சை மையமானது.