கொரோனா கிருமித் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பஞ்சாயத்து தலைவி ஒருவர் அவர்களுக்குப் பாதபூசை செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான சந்திரா என்பவர் அப்பகுதி பஞ்சாயத்துத் தலைவராக உள்ளார்.
இந்தப் பஞ்சாயத்தில் 11 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள்.
கடந்த இரு மாதங்களாக இந்த 11 ஊழியர்களும் இடைவிடாது தூய்மைப் பணியில் ஈடுபட்டதுடன் கொரோனா கிருமி பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் துப்புரவுப் பணியாளர்கள் 11 பேருக்கும் புத்தாடைகளைப் பரிசளித்ததோடு நிற்காமல் அவர்களை நாற்காலியில் அமர வைத்து, கால்களைக் கழுவி பாதபூசை செய்தார் சந்திரா.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 11 பேரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
"இவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் நன்றி சொல்ல வேண்டியது அவசியம். பொதுமக்களைக் காக்கும் வகையில் பணியாற்றி வருகின்றனர். கண்டராதித்த்தம் பஞ்சாயத்தில் 1300 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் என்னுடைய சொந்த செலவில் தலா 300 ரூபாய் மதிப்பிலான மூலிகை சோப், மஞ்சள் தூள், மளிகைப் பொருட்களைத் தூய்மைப் பணியாளர்கள் மூலம் விநியோகித்துள்ளோம்," என்றும் பஞ்சாயத்து தலைவி சந்திரா மேலும் தெரிவித்தார்.
#பாதபூசை

