புதுடெல்லி: பற்றாக்குறையைச் சமாளிக்க சீனாவிடமிருந்து முகக்கவசங்களையும் சுவாசக் கருவிகளையும் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் நேற்று ராய்ட்டர்ஸ் செய்தியிடம் கூறினார்.
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல சீனாவின் மருத்துவச் சாதனங்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் இந்தியா இத்தகைய முடிவை எடுத்து உள்ளது.
திங்கட்கிழமை மாலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,251 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. 32 பேர் மாண்டுவிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் அதிகமானோருக்குக் கிருமி பரவும் நிலை உள்ளதால் அதனைச் சமாளிக்க இப்போதிருக்கும் மருத்துவ சாதனங்கள் போதாது. எனவே முகக்கவசம், முழு உடல் கவசம், சுவாசக் கருவிகள் உள்ளிட்டவற்றை உள்நாட்டில் அதிகமாகத் தயாரிப்பதோடு சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
"சீனாவிடமிருந்து சாதனங்களை வாங்குவது உறுதி. காரணம் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அதிக காலம் தேவைப்படும்," என்று இந்திய கொள்கை விளக்க உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவுக்கு தற்போது 38 மில்லியன் (3.8 கோடி) முகக்கவசங்களும் 6.2 மில்லியன் (ஆறு லட்சத்து 20 ஆயிரம்) மருத்துவ பாதுகாப்புச் சாதனங்களும் தேவைப்படுகின்றன.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்த ஆயிரக்கணக்கான முகக் கவசங்களை இறக்குமதி செய்த நெதர்லாந்து அவை தரமற்றவை என தெரிய வந்ததும் மக்களிடமிருந்து முகக்கவசங்களை திரும்பப் பெற்றுவிட்டது. அதேபோல சீனாவிடமிருந்து வாங்கிய மருத்துவ சோதனைக் கருவிகளில் கோளாறு இருப்பதாக ஸ்பெயின் தெரிவித்து உள்ளது.
தரமற்றவை என்றும் கோளாறுகள் இருப்பதாகவும் இதுபோன்ற நாடுகள் தெரிவித்த புகார்களை சீனாவின் வெளியுறவு அமைச்சு ஏற்றுக்கொண்டு உள்ளது. அவற்றில் சில பிரச்சினைகள் இருக்கலாம் என்றது அது.
"இதர நாடுகளின் மக்களைப் பாதுகாக்க உதவும் நோக்கில் சீனாவின் மருத்துவ சாதனத் தயாரிப்பாளர்கள் இரவு பகலாக வேலை செய்கிறார்கள்.
"எங்களது உதவும் நோக்கமும் அக்கறையும் நியாயமானவை. குறைகள் கண்டறியப்பட்டால் அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளிடம் எடுத்துக்கூறி சரி செய்யுமாறு கோருவோம்," என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் திங்கட்
கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

