புதுடெல்லி: டெல்லியின் நிஜாமுதீன் பகுதி புதிய கிருமித்தொற்று மையமாக உருவெடுத்து உள்ளது. இங்கு உள்ள சமய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பத்து பேர் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் நடந்த மாநாட்டில் இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்க ளில் 300க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுப் பிரதிநிதிகள்.
மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் நேற்று பிற்பகல் வரை 10 பேர் மாண்டுவிட்டனர். 24 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்று அறிகுறிகுறிகளுடன் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்த சமய போதகர்கள் மாநாட்டுக்குப் பின்னர் தெலுங்கானா, பீகார், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று பள்ளிவாசல்களில் பல கூட்டங்களை நடத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து தப்லிக் ஜமாத் மவுலானா மர்காஸ் நிஜாமுதீன் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மவுலானா மர்காஸ் நிஜாமுதீன் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். “நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லிக் ஜமாத் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. நாங்கள் இந்த மாநாடு நடத்தியதிலும் மக்களைத் தங்கவைத்ததிலும் சட்டத்தை மீறவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின்போது விசா விதிகளை மீறியதற்காக 300 வெளிநாட்டு சமய போதகர்களை கறுப்புப்பட்டியலில் வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, சவூதி அரேபியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
சுற்றுலா விசாவில் வந்த இவர்கள் அனைவரும் விதிகளை மீறி சமய மாநாட்டில் பங்கேற்றதாக அதிகாரிகள் கூறினர். இந்தியா முழுவதும் கிருமித்தொற்று பரவ இந்த மாநாடு பேராபத்தை உருவாக்கி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.