புதுடெல்லி: இந்திய மருத்துவர் உருவாக்கியுள்ள அளவில் சிறிய சுவாசக் கருவிகள் ‘கொவிட் 19’ நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெகுவாக கைகொடுத்து வருகிறது.
ரொட்டி வாட்டும் கருவியைப் போன்று அளவில் சிறிதாக உள்ள இந்த சுவாசக் கருவிகளைக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும். இதையடுத்து இவற்றின் உற்பத்தி அளவை அதிகரிக்குமாறு இந்திய அரசு அதன் தயாரிப்பு நிறுவனத்தைக் கேட்டு கொண்டுள்ளது.
“தற்போது பயன்பாட்டில் உள்ள அளவில் பெரிய சுவாசக் கருவிகளின் விலை 10,000 அமெரிக்க டாலருக்கும் அதிகம். ஆனால், நாங்கள் தயாரித்துள்ள இந்த சுவாசக் கருவியின் விலை சுமார் 2,000 டாலர்கள் மட்டுமே. மேலும் இவற்றை எளிதாக இடமாற்றம் செய்ய முடியும்,” என்கிறார் இதை உருவாக்கிய இரண்டு பேரில் ஒருவரான தீபக் அகர்வால்.
இவரும் திவாகர் வைஷ் என்ற விஞ்ஞானியும் இணைந்து உருவாக்கிய இந்த விலை குறைவான சுவாசக் கருவியின் மாதாந்திர உற்பத்தி அளவானது 500 என்பதிலிருந்து 20,000 கருவிகளாக அதிகரித்துள்ளது.
கொரோனா கிருமி தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும். அத்தகையவர் களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்) இந்தியாவில் தற்போது 40,000 மட்டுமே உள்ளன.
இதனால் கிருமித் தொற்றுப் பரவல் சமூகப் பரவலாக மாறும் பட்சத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க போதுமான சுவாசக் கருவிகள் இல்லாமல் தவிக்க நேரிடும் என நிபுணர்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தீபக் அகர்வால் உருவாக்கியுள்ள இந்தப் புதிய கருவி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
“இது வெறும் 3.5 கிலோ எடையுள்ள கருவி. ஒரு தங்கு விடுதியை மருத்துவமனையாக மாற்றவேண்டும் என்றால் இந்தக் கருவியை அங்கு சுலபமாகக் கொண்டு செல்ல முடியும். மேலும் விடுதி அறையில் இந்தக் கருவியை வைத்து உடனடியாக நோயாளிகளுக்கு சிகிச்சையை தொடங்க முடியும்.
“மேலும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நோயாளிகளை இந்தக் கருவியுடன் வீட்டுக்கும் அனுப்பி வைக்கலாம்,” என்கிறார் தீபக் அகர்வால்.