புதுடெல்லி: கொரோனா கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,900ஐ கடந்துள்ள நிலையில் மத்திய அரசு நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
நாட்டில் கொரோனா கிருமி தொற்று பெருக மையப்புள்ளிகளாகத் திகழ்ந்த 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வார காலத்தில்தான் நாட்டில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் வேகமாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி, கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 10 இடங்கள்தான் கொரோனா கிருமித் தொற்று பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்ச்சி ஒன்றில் வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றதாகவும் இதன் மூலமாக நாடு முழுவதும் கிருமித் தொற்று பரவியது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர் மூலமாக சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், அவர் பணியாற்றும் மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று பரவியுள்ளது. கேரளாவை பொறுத்தவரை வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர் களால் கிருமித்தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சமய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் தமிழகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் காஷ்மீருக்கும் கொரோனா கிருமித் தொற்று பரவியுள்ளது.
மொத்தத்தில் டெல்லி, கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா இரண்டு இடங்களை கொரோனா கிருமித் தொற்றின் மையப் புள்ளிகளாக மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது.
இதேபோல் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா ஓரிடம் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 10 பகுதிகளிலும் மத்திய சுகாதாரத் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த 10 இடங்களைச் சேர்ந்த பலருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று மேலும் சில இடங்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பட்சத்தில் கொரோனா கிருமி தொற்றுப் பரவல் அடுத்தக் கட்டத்தை எட்டாது என மருத்துவத்துறை, சுகாதாரத்துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தீவிரமடையும் சுகாதார நடவடிக்கைகள்
நாடு முழுவதும் கிருமி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. சாலைகள், வீடுகள், அலுவலகங்கள் என பல்வேறு பகுதிகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன.