தமிழகத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி லோகேஷ் எனும் 23 வயது இளைஞர், இந்தியாவில் நடப்பில் இருக்கும் ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து சொந்த ஊரான நாமக்கல்லுக்கு நடந்து வரும் வழியில் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி லோகேஷ். நாக்பூர் அருகே உள்ள வார்தாவில் உணவு பதப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் தவித்த அவர் தமது 29 சகாக்களுடன் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டார்.
நாக்பூரிலிருந்து 1,300 கி. மீ. தூரம் உள்ள தமது ஊருக்கு நடந்தே ஊர் திரும்ப லோகேஷ் முடிவெடுத்தார்.
ஒன்பது நாட்களாக நடந்து சென்ற அவர் கள் வழியில் கிடைத்த லாரி போன்ற வாகனங்களிலும் சிறிது தூரம் கடந்து வந்தனர்.
ஆனால், ஹைதராபாத் அருகே செகந்தராபாத் வந்தபோது போலிசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது லோகோஷுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லோகேஷின் உடல் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.