புதுடெல்லி: கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த இந்தியா விதித்துள்ள மக்கள் ஊரடங்கு உலகுக்கே முன்உதாரணமாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஏப்ரல் 14 வரை அமலில் இருக்கும் அந்த ஊரடங்கை மீறாமல் மக்கள் வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமென அவர் வலியுறுத்தினார்.
இந்த ஒற்றுமையை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் வீட்டில் இருந்தவாறே கொரோனாவுக்கு எதிராக மாபெரும் சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி நாளை இரவு 9 மணிக்குத் தொடங்கி 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, கைபேசி விளக்குகளை ஒளிர விட வேண்டு மென அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர், கொரோனா கிருமி தொடர்பாக இருமுறை நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருக்கிறார். முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவர் காணொளிச் செய்தி ஒன்றை மக்களுக்கு வெளியிட்டார். அதில் இந்த விவரங்களைக் குறிப்பிட்டு உள்ள திரு மோடி, ஊரடங்கை மீறாத நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து இருப்பது பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்ட அவர், ஒற்றுமையுடன் கொரோனாவை வீழ்த்துவோம் என்றும் ஒளிமயமான காலத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்துவோம் என்றும் சூளுரைத்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி விளக்கேற்றாமல் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.