அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு முதல் பரிசு; நண்பர்களுக்கும் பங்கு

அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு முதல் பரிசு; நண்பர்களுக்கும் பங்கு

2 mins read
c94d1b62-c3f0-485d-bf78-60bfda94fdfb
அதிர்ஷ்டக் குலுக்கை இணையம் வழியாக நேரடியாக, தமது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறிய ஜிஜேஷ் கொரோத்தன் (இடது), தனது இரு நண்பர்களுடன் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வதாக கூறி உள்ளார். நன்றி: கல்ஃப் சியூஸ் -

அபுதாபி 'பிக் லாட்டரி' குலுக்கலில், அல் கைமாவில் வசிக்கும் மூன்று இந்திய ஓட்டுநர்கள் முதல் பரிசாக 20 மில்லியன் திர்ஹாம் (S$7,84 மில்லியன்) தொகையை வென்றுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மாதாந்திர அபுதாபி 'பிக் டிக்கெட் லாட்டரி' மிகவும் பிரபலம்.

இந்த மாத குலுக்கல் முடிவுகள் நேற்று (ஏப்ரல் 3) வெளியாகின. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இன்றி, குலுக்கல் நடைபெற்றது. இருப்பினும் அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதில் '041779' என்ற சீட்டு எண்ணுக்கு, முதல் பரிசு விழுந்தது.

இந்த அதிர்ஷ்ட சீட்டை, அல் கைமாவில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திய ஓட்டுநரான ஜிஜேஷ் கொரோத்தன் என்பவர் வாங்கியிருந்தார்.

இவர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அதிர்ஷ்டக் குலுக்கை இணையம் வழியாக நேரடியாக, தமது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறிய இவர், தனது இரு நண்பர்களுடன் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வதாக கூறி உள்ளார். இவர்களும் அங்கு ஓட்டுநர்களாக வேலை பார்க்கிறார்கள்.

பம்பர் பரிசு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கொரோத்தன், "மிகவும் சிரமமான இந்தக் காலகட்டத்தில் சரியாக வேலை இல்லை. எனது குடும்பத்தை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பிவிடலாமென நினைத்தேன். ஆனால், இந்தப் பரிசின் மூலம் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். இந்த வெற்றி ஓர் அதிசயம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பரிசுத் தொகையில் பெரும்பகுதி தனது மகளின் கல்விக்குப் பயன்படும் என்று கூறிய அவர், நண்பர்களுடன் சொகுசு கார் வாடகை விடும் தொழிலில் ஈடுபட ஒரு தொகையை ஒதுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்